தோக்கியோ: ஜப்பானில் குறைந்தது நால்வரைப் பலிவாங்கிய தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி, கத்தி ஆகியவற்றைக் கொண்டு அந்த ஆடவர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படுகிறது. மாண்டோரில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர்.
இச்சம்பவம் ஜப்பானின் நகானோ வட்டாரத்தில் நேர்ந்தது. சந்தேக நபர் அவ்வட்டாரத்தின் நாக்கானோ நகருக்கு அருகே பிடிபட்டார். விவசாய நிலத்தில் இருக்கும் கட்டடம் ஒன்றில் அவர் கைதானார்.
உள்ளுர் நேரப்படி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஆடவர் தாமாகவே வீட்டிலிருந்து வெளியே வந்ததாகவும் நாக்கானோ நகர காவல் நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர் 30 வயதைத் தாண்டிய ஒரு விவசாயி என்று நம்பப்படுகிறது.
அவர் பதுங்கியிருந்த கட்டடத்திலிருந்து அவரின் தாய் தப்பியோடியதாக உள்ளூர் ஊடகங்கள் சில குறிப்பிட்டன. வேறு ஒரு பெண்ணும் கட்டடத்தில் இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.