ஹனோய்: ஆண்டுதோறும் தான் ஏற்றுமதி செய்யும் அரிசியின் அளவை 44 விழுக்காடு குறைக்கவிருப்பதாக வியட்னாம் அறிவித்துள்ளது.
ஓர் ஆண்டுக்கு ஏற்றுமதி செய்யும் அரிசியின் அளவை நான்கு மில்லியன் டன்னுக்குக் குறைப்பது வியட்னாமின் இலக்கு.
2030ஆம் ஆண்டுக்குள் இலக்கை அடைய அந்நாடு எண்ணம் கொண்டுள்ளது.
உலகில் ஆக அதிக அளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வியட்னாம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
இந்தியா, தாய்லாந்து ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் வியட்னாம் இருக்கிறது.
ஆண்டுதோறும் 80,000லிருந்து 90,000 டன் அளவு அரிசி வியட்னாமிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இறக்குமதியாகும் அரிசியின் மதிப்பு கிட்டத்தட்ட 80 மில்லியன் வெள்ளி.
சிங்கப்பூரில் விற்கப்படும் அரிசியில் 20 விழுக்காடு வியட்னாமிலிருந்து இறக்குமதியாகிறது.
உள்நாட்டு உணவு விநியோகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக வியட்னாம் அரசாங்கத்தின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று வெளியான அந்த ஆவணத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கண்டிருக்கிறது.