டெட்ராய்ட்: உலக நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கலந்துகொண்ட 'ஏபெக்' எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்புக்கான உச்ச நிலை மாநாட்டில் அனைத்து நாடுகளையும் ஈடுபடுத்திய, நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், உக்ரேன் பிரச்சினை தொடர்பில் ரஷ்யா, சீனா தெரிவித்த ஆட்சேபணை காரணமாக மாநாடு கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.
இந்த இரண்டு நாள் மாநாடு அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடைபெற்றது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரின் மாநாட்டு அறிக்கையை வெளியிட்டார்.
சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, அனைத்து நாடுகளையும் ஈடுபடுத்திய வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை நடைமுறைப்படுத்துவதை மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் மறுஉறுதி செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நவம்பர் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள மாநாட்டில் கூட்டறிக்கை வெளியிடப்படும் என்று நம்புவதாக கேத்ரின் சொன்னார்.

