வாஷிங்டன்: பல வாரங்களாக நீடித்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக, அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்துவதற்கு ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் கொள்கை அளவில் இணங்கியுள்ளன.
ஆயினும், அந்த உடன்பாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த உடன்பாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 'சமரசம்' எனக் குறிப்பிட்டார். மாறாக, நாடாளுமன்ற நாயகர் கெவின் மெக்கார்த்தி, 'இதற்குமுன் இல்லாத அளவிற்குக் கடுமையான செலவுக் குறைப்பு நடவடிக்கை' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இவ்விவகாரத்தில் விரைந்து உடன்பாடு எட்டப்படாவிடில், வரும் ஜூன் 5ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகைக்குப் போதிய பணம் இல்லாமல் போகலாம் என்று அமெரிக்க நிதி அமைச்சு எச்சரித்திருந்தது.
வரி வருவாயைவிட அதிகமாகச் செலவு செய்வதால் அரசாங்கத்தை நடத்த அமெரிக்கா கடன் வாங்க வேண்டியுள்ளது.
இப்போது 31.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$42.2 டிரில்லியன்) என்ற அளவில் இருக்கும் கடன் உச்ச வரம்பை உயர்த்த வேண்டுமெனில், கல்வி, சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்குச் செலவிடும் தொகையைக் குறைக்க வேண்டும் என்று குடியுரசுக் கட்சி வலியுறுத்தி வருகிறது.
மாறாக, குறிப்பிட்ட சில வரிகளை உயர்த்த ஜனநாயகக் கட்சி யோசனை தெரிவித்துள்ளது.
கடன் உச்ச வரம்பு உயர்வு தொடர்பான உடன்பாடு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
எனினும், அரசாங்கத்தின் தற்காப்பு சாராச் செலவினங்கள் அடுத்த ஈராண்டுகளுக்கு உயர்த்தப்பட மாட்டா என்றும் 2025ஆம் ஆண்டு முதல் 1% உயர்த்தப்படும் என்றும் 'சிபிஎஸ்' செய்தி குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில் 'மெடிக்எய்ட்' சுகாதாரக் காப்புறுதியில் எந்த மாற்றமும் இராது என்றும் அச்செய்தி கூறுகிறது.
இந்த உடன்பாடு தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் புதன்கிழமை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. அதற்குமுன், அதிபர் பைடனும் நாடாளுமன்ற நாயகர் மெக்கார்த்தியும் உடன்பாடு தொடர்பில் தங்கள் கட்சியினரிடம் கருத்திணக்கத்தை ஏற்படுத்த முயல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

