கியவ்: உக்ரேனுடனான சண்டை தொடங்கியதிலிருந்து இல்லாத வகையில், அந்நாட்டின்மீது தாக்குதல் தொடுப்பதற்காக ரஷ்யா நேற்று முன்தினம் இரவு 54 ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.
ஆயினும், கிட்டத்தட்ட அவை அனைத்தையும் சுட்டு வீழ்த்தி விட்டதாக உக்ரேன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவற்றில் 40 வானூர்திகள் தலைநகர் கியவ்வைக் குறிவைத்ததாகக் கூறப்பட்டது. இத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்; மூவர் காயம் அடைந்தனர்.
ஒரே நேரத்தில் பல திசைகளிலிருந்தும் ஆளில்லா வானூர்திகள் வந்தன என்றும் கியவ் நகர மேயர் விட்டலி கிலிட்ஸ்கோ கூறினார்.
இம்மாதத்தில் ஆளில்லா வானுர்திமூலம் கியவ்மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது இது 14வது முறை. உக்ரேனின் ராணுவ நிலைகளையும் முக்கிய உள்கட்டமைப்புகளையும் ரஷ்யா குறிவைத்ததாகக் கூறப்பட்டது.
இதனிடையே, ரஷ்யா மேலும் பல ஆளில்லா வானூர்திகளை அனுப்பக்கூடும் என்பதால் கியவ் நகரவாசிகள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

