மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோமீது உக்ரேன் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இது, உக்ரேன் இதுவரை மேற்கொண்டுள்ள மிகப் பெரிய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒன்று.
தாக்குதலில் குடியிருப்புக் கட்டடங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன
கடந்த சில வாரங்களாக ரஷ்யாவின் உட்புறங்களில் கூடுதலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. ரஷ்யாவின் எண்ணெய்க் குழாய் கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றின்மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இம்மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் மாளிகைமீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு உக்ரேன்தான் காரணம் என்று ரஷ்யா கூறியது.
ரஷ்ய அதிபர் மாளிகையைத் தான் தாக்கவில்லை என்று உக்ரேன் கூறியிருந்தது. எனினும், அது உக்ரேனின் செயல் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நம்புவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்திருந்தது.
மாஸ்கோவில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக மாஸ்கோ நகர மேயர் செர்கெய் சொப்யானின் கூறினார். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாஸ்கோவின் விமான நிலையங்கள் தொடர்ந்து இயங்கின. உயிரிழப்பு குறித்து தகவல் ஏதும் இல்லை.
ஆகக் கடைசி நிலவரப்படி இந்தத் தாக்குதல் குறித்து உக்ரேன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக உக்ரேனிய ஆகாயப் படைத் தளங்கள்மீது ரஷ்யாவும் ரஷ்யாவின் தொழில்துறை நிலையங்கள்மீது உக்ரேனும் தாக்குதல்களை மேற்கொண்டதாக ரஷ்யா கூறியிருந்தது. ரஷ்யா-உக்ரேன் போர் 15 மாதங்களாக நீடித்து வந்துள்ளது.

