கோலாலம்பூர்: சென்ற ஆண்டு நவம்பர் மாத்ம மலேசியாவின் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்நாட்டில் சமூக ஊடகங்களில் பதிவான வெறுப்பை வெளிப்படுத்தும் கருத்துகள் கணிசமாக அதிகரித்ததென ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அதோடு, இன ரீதியான வெறுப்புப் பேச்சுக்குப் பின்னால் அதிகம் இருந்தது பாஸ் கட்சி என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இருக்கும் பாஸ், நாடாளுமன்றத்தில் 43 இடங்களை வகிக்கிறது.
சிஐஜே எனும் சுயேச்சை செய்தியாளர் நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சைன்ஸ் மலேசியா பல்கலைக்கழகம், மலேசியா சாபா பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்து சிஐஜே அறிக்கையைத் தயார்செய்தது.
அரசியல் சூழலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் 90க்கும் மேற்பட்ட சமூக ஊடகக் கணக்குகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் டுவிட்டர், ஃபேஸ்புக், யூடியூப், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் உள்ள கணக்குகள் ஆராயப்பட்டன.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதியன்று மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்குப் பிறகு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலேசிய வரலாற்றில் முதன்முறையாக தொங்கு நாடாளுமன்றம் உருவானது. ஐந்து நாள்களுக்குப் பிறகு திரு அன்வார் இப்ராகிம் பிரதமராகப் பதவி வகிப்பார் என்று முடிவானது.
பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி உள்ளிட்டவற்றைக் கொண்ட கூட்டணி ஆட்சியின் தலைவராக திரு அன்வார் பொறுப்பு வகிக்கிறார்.

