காபூல்: வடஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளி ஒன்றில் நஞ்சு வைக்கப்பட்டதால் குறைந்தது 60 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 80 மாணவிகள் பாதிக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாயின.
சர்-இ-பொல் மாநிலத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் பெண்கள் கல்வி குறித்து பெரும் சர்ச்சை இருந்துவரும் வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அண்டை நாடான ஈரானில் பல பெண்கள் பள்ளிகளில் நஞ்சு வைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுவந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து இப்போது ஆப்கானிஸ்தானில் இவ்வாறு நடந்துள்ளது.
அடையாளம் தெரியாத சிலர் சஞ்சாராக் வட்டாரத்தில் இருக்கும் பெண்கள் பள்ளிக்குள் நுழைந்து நஞ்சு வைத்ததாக சர்-இ-பொல் காவல்துறைப் பேச்சாளர் கூறினார். மாணவிகள் வகுப்பறைகளுக்குச் சென்றபோது அவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

