கியவ்: வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனின் கெர்சான் வட்டாரத்துக்கு அந்நாட்டு அதிபர் வொலொடமிர் ஸெலென்ஸ்கி நேரில் சென்றுப் பார்வையிட்டுள்ளார்.
அவசர சேவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அவர் கெர்சான் வட்டாரத்துக்கு நேரில் சென்றார்.
ககோவ்கா எனும் பெரிய அணைக்கட்டு அழிந்துபோனதால் வெள்ளம் ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் ட்னிப்ரோ ஆற்றிலிருந்து வெளியான நீரினால் வெள்ளம் ஏற்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது, மீட்புப் பணிகளுக்கு ஏற்பாடு செய்வது போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக திரு ஸெலென்ஸ்கி கூறினார்.
அவரின் வருகை பதிவான காணொளி டெலிகிராம் செயலியில் வெளியானது.
அதில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 2,000 பேர் வெளியேறிவிட்டதாக கெர்சான் வட்டார ஆளுநர் தெரிவித்தார்.
இச்சம்பவத்துக்கு உக்ரேனும் ரஷ்யாவும் ஒன்றை மற்றொன்று குறை கூறி வருகின்றன.
அணைக்கட்டு அழிந்துபோனதால் குறைந்தது ஐவர் மாண்டுவிட்டதாக மாஸ்கோவுக்குக்கீழ் இருக்கும் அதிகாரிகள் கூறினர்.
41 பேர் மருத்துவமனையில் இருப்பதாகவும் மாஸ்கோ சொன்னது.