பெய்ஜிங்: சீனாவின் டியான்ஜின் நகரில் உயரமான அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் நிலத்தில் குழிகள் விழுந்ததால் பல உயரமான அடுக்குமாடி கட்டடங்களுக்கு அருகே இருக்கும் சாலைகளில் கடந்த சில நாள்களாகப் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இம்மாதம் மூன்றாம் தேதி நிலவரப்படி 25 தளங்களைக் கொண்ட குறைந்தது மூன்று அடுக்குமாடி கட்டடங்களிலிருந்து மொத்தம் 3,899 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் ஊடகம் இந்த விவரத்தைத் தெரிவித்தது.
வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அருகில் இருக்கும் ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர். நிலத்தடியில் சுமார் 1,300 மீட்டர் ஆழத்தில் இருக்கும் துவாரங்களால் விரிசல்கள் ஏற்பட்டதாக நிலவியல் வல்லுநர்கள் கூறினர் என்று டியான்ஜின் நகர அரசாங்கம் நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் தெரிவித்தது.
சீனாவில் கட்டடப் பாதுகாப்பு தொடர்பில் கவலை இருந்து வருகிறது. இந்த விவகாரம் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவின் டியான்ஜின் நகரின் சாலைகளில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன

