ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அன்னாக் கிராக்காட்டுவா எரிமலை நேற்று குமுறியது. அது மூன்று கிலோமீட்டருக்கும் மேலான உயரத்துக்கு சாம்பலைக் கக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அன்னாக் கிராக்காட்டுவா என்றால் 'கிராக்காட்டுவாவின் பிள்ளை' என்று பொருள்.
1883ஆம் ஆண்டு கிராக்காட்டுவா எரிமலை குமுறியது. அது, வரலாற்றில் ஆக அதிக அழிவை ஏற்படுத்திய எரிமலைக் குமுறல்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னாக் கிராக்காட்டுவாஎரிமலையைக் கொண்ட தீவு கடலிலிருந்து எழுந்தது. அன்னாக் கிராக்காட்டுவா நேற்று குமுறியபோது அது இந்தோனீசியாவின் ஜாவா, சுமத்திரா தீவுகளைப் பிரிக்கும் நீரிணைக்கு மேல் சாம்பலைக் கக்கியது.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8.46 மணிக்கு எரிமலை குமுறியது. சேதம் ஏற்பட்டதாகவோ உயிரிழப்பு இருந்ததாகவோ தகவல் ஏதும் இல்லை.
எரிமலைக் குமுறலின் மையப் பகுதியைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் பரப்பளவில் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

