கியவ்: ரஷ்யாவை எதிர்த்து கடுமையாக போரிட்டதில் டோனெட்ஸில் மூன்று கிராமங்களை மீண்டும் பிடித்துவிட்டோம் என்று உக்ரேன் நேற்று அறிவித்தது.
முதல் முறையாக ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேன் முன்னேறியிருக்கிறது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை அன்று ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பொதுமக்களை வெளியேற்றிக் கொண்டிருந்த மீட்புப் படகு மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்ததில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டனர், 23 பேர் காயம் அடைந்தனர் என்று கெர்சன் வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட சிந்தனையாளர் ஆய்வுக் குழு, குறைந்தது நான்கு முன் களங்களில் கியவ் படையினர் ரஷ்யாவை எதிர்த்து எதிர்த்தாக்குதலை நடத்தினர் என்று தெரிவித்தது.
பல மாத எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு ரஷ்யப் படைகளுக்கு எதிரான எதிர்த்தாக்குதல் தொடங்கியதை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி சனிக்கிழமை அன்று உறுதிப் படுத்தினார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை, மூன்று கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக அவர்கள் அறிவித்தனர்,
"டோனெட்ஸ் வட்டாரத்தின் நெஸ்குச்னே மீண்டும் உக்ரேனிய கொடியின்கீழ் வந்துள்ளது," என்று மாநில எல்லை பாதுகாப்பு சேவை கூறியது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை உக்ரேனின் ராணுவம் அருகில் உள்ள பிளாகேடாட்னே கிராமத்தைக் கைப்பற்றியதாகக் கூறியது. இடிந்த கட்டடத்தின் மீது ராணுவ வீரர்கள் உக்ரேன் கொடியை ஏற்றிய காணொளியை தரைப்படையினர் வெளியிட்டுள்ளனர்.
உக்ரேனியப் படைகள், பல ரஷ்ய வீரர்களையும் பிடித்துள்ளதாக தொலைக்காட்சியில் பேசிய உக்ரேனின் ராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

