கிரிவி ரி: உக்ரேனின் மத்தியப் பகுதியில் உள்ள கிரிவி ரி நகரம் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு மிகக் கடுமையான ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்தது.
இதில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர். ஏறத்தாழ 25 பேர் காயமுற்றதாகவும் பொதுமக்களின் குடியிருப்புக் கட்டடங்களும் இதர கட்டடங்களும் சேதமுற்றதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.
ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டடத்திலும் சரக்குக் கிடங்கு ஒன்றிலும் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடியதாக டினிபிரோபெட்டிரோவ்ஸ்க் பகுதியின் ஆளுநர் திரு செர்ஹி லைசாக் தெரிவித்தார்.
"இடிபாடுகளுக்கு அடியில் சிலர் இன்னும் மாட்டிக்கொண்டிருக்கின்றனர். இடிந்து விழுந்த கட்டடம் தீப்பிடித்து எரிகிறது," என்றார் அவர்.
ரஷ்யா பாய்ச்சிய ஏவுகணைகளில் மூன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறிய திரு லைசாக், மற்ற ஏவுகணைகள் இலக்கை அடைந்ததாகத் தெரிவித்தார்.
தாக்கப்பட்ட கிரிவி ரி நகரம் உக்ரேனிய அதிபர் வொலொடிமியர் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு அதிபர் ஸெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்தார்.
"குடியிருப்புக் கட்டடங்கள், சிறு நகரங்கள், பொதுமக்களை ரஷ்யப் படைகள் தொடர்ந்து குறிவைத்துத் தாக்குகின்றன. இதனால் உயிரிழந்தோர், காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என்று அவர் கூறினார்.
உக்ரேன் நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை அந்நாடு முழுவதிலும் எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டது.
உக்ரேனியத் தலைநகர் கியவ்வை நோக்கி அனுப்பப்பட்ட ஏவுகணைகள் அனைத்தையும் உக்ரேனிய ஆகாயப் படை சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யா பாய்ச்சிய 14 ஏவுகணைகளில் பத்து ஏவுகணைகளைத் தனது ஆகாயப் படை அழித்ததாக உக்ரேனிய ராணுவம் கூறியது.
ரஷ்யா அனுப்பிய நான்கு ஆளில்லா வானூர்திகளில் ஒன்று அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆளில்லா வானூர்திகள் ஈரானில் தயாரிக்கப்பட்டவை என்று உக்ரேன் கூறியது.

