கோலாலம்பூர்: மலேசியாவின் உரிமைகள், இறையாண்மை சிறிதளவும் விட்டுக்கொடுக்கப்படாது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதி அளித்துள்ளார்.
எல்லைப் பகுதியில் உள்ள சில நிலப்பரப்புகள், தீவுகள் குறித்து இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே சர்ச்சை நீடிக்கிறது.
தென்சுலாவீசியில் உள்ள செபாத்திக் தீவு போன்ற இடங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்று இருதரப்பும் கூறி வருகின்றன. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
கடல்துறை தொடர்பாக மலேசியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அண்மையில் கடல்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக திரு அன்வார் கூறினார்.
ஆனால் சர்ச்சைக்குரிய இடங்கள் கடற்துறை ஒப்பந்தங்களில் இடம்பெறுவதில்லை என்று திரு அன்வார் தெளிவுபடுத்தினார்.
செபாத்திக் தீவு தொடர்பான விவகாரம் குறித்து கலந்துரையாட சாபா மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவரை அழைக்க இருப்பதாக திரு அன்வார் தெரிவித்தார்.
தஞ்சோங் பெலேப்பாஸ் துறைமுகம் அருகில் உள்ள எல்லைகளும் ஒப்பந்தங்களில் இடம்பெறவில்லை என்று அவர் கூறினார்.
"இந்தோனீசிய நிபுணர்களைப் பொறுத்தவரை சர்ச்சைக்குரிய இடங்கள் இந்தோனீசியாவுக்குச் சொந்தமானவை என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இடங்கள் மலேசியாவுக்குச் சொந்தமானவை என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
"எனவே, தென்சுலாவீசி எல்லைப் பகுதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்கிறது," என்று நேற்று நடைபெற்ற மலேசிய நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

