ஏதன்ஸ்: கிரீசுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 59 அகதிகள் கடலில் மூழ்கி மாண்டதாக கிரேக்க கடலோரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஏறத்தாழ 100 பேர் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் படகு கவிழ்ந்தபோது அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதுவே கிரீஸின் கடற்பகுதியில் இவ்வாண்டு நிகழ்ந்துள்ள மிக மோசமான படகு விபத்து.
சம்பந்தப்பட்ட படகு இத்தாலிக்குச் சென்றுகொண்டிருந்ததாக கடலோரப் பாதுகாப்புப் படை கூறியது.
அந்தப் படகு அனைத்துலகக் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்ததை ஐரோப்பிய ஒன்றிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குச் சொந்தமான விமானம் நேற்று முன்தினம் கண்டதாக அதிகாரிகள் கூறினர்.
படகில் இருந்தோருக்கு உதவ கிரேக்க அதிகாரிகள் நேற்று முன்தினம் முன்வந்ததாகவும் ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சில மணி நேரம் கழித்து, அந்தப் படகு கவிழ்ந்ததாகவும் அதில் இருந்தவர்கள் கடலில் விழுந்ததாகவும் அதிகாரிகள் கூறியனர்.
அவர்களைத் தேடி மீட்கும் பணிகளை கிரேக்க அதிகாரிகள் உடனடியாக முடுக்கிவிட்டனர்.
அந்தப் படகு லிபியாவைச் சேர்ந்தது என்றும் அதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் 20 வயதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்ட இளையர்கள் என்றும் கிரேக்க ஊடகம் தெரிவித்தது.
ஆனால் படகில் இருந்தோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், படகு எங்கிருந்து புறப்பட்டுச் சென்றது ஆகிய விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் கலமாட்டா நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் அகதிகளில் பெரும்பாலானோர் கிரேக்க கடற்பகுதி வழியாகத்தான் செல்கின்றனர்.

