போர்ட் மொரேஸ்பி: அமெரிக்காவும் பாப்புவா நியூகினியும் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி பாப்புவா நியூகினியில் உள்ள ஆறு முக்கிய துறைமுகங்களிலும் விமான நிலையங்களிலும் அமெரிக்கா அதன் படைகளை நிறுத்தலாம்.
அவற்றில் லொம்புரும் கடற்படை முகாமும் அடங்கும்.
பசிபிக் கடலின் தென்மேற்கு முனையில் இருக்கும் லொம்புருமை இதற்கு முன்பு பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தப்படி அமெரிக்கப் படைகள் பாப்புவா நியூகினிக்குள் எவ்வித தடையுமின்றி போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்புவா நியூகினியில் உள்ள சில இடங்களில் அமெரிக்கா மேம்பாட்டு, கட்டுமானப் பணிகளை நடத்தலாம்.
இந்த முக்கிய ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கனும் பாப்புவா நியூகினியின் தற்காப்பு அமைச்சர் வின் பக்ரி டாக்கியும் கையெழுத்திட்டனர்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

