தாதிகளின் சீருடைகள் குறித்து கருத்து தெரிவித்த பாஸ் கட்சி எம்.பி.யை பலர் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா: வியாழன் அன்று நாடாளுமன்றத்தில் பேசிய பாஸ் கட்சியின் குவாந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான வான் ரஸாலி வான் நோர், தாதிகளின் உடைகள் மிகவும் இறுக்கமாக உள்ளன என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல அமைப்புகள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளன.
"தாதிகள் அணியும் சீருடைகள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அவர்கள் தங்கள் பணிகளைச் செய்வதை எளிதாக்கும் வகையில் உள்ளன. அவர்களின் சீருடை இறுக்கமாக இல்லை. மேலும் சுகாதார அமைச்சு நிர்ணயித்த வழிகாட் டல்கள் இதில் கடைபிடிக்கப்படுகின்றன," என்று மலாயன் தாதிகள் சங்கத்தின் தலைவர் நோர் ஹயாடி அப்துல் ரஷித் கூறியுள்ளார். தாதிகளின் சீருடை விதிகள் தெளிவாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
சீருடைகள் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது, மேல் பகுதியின் நீளம் இடுப்புக்கு கீழே மற்றும் முழங்காலுக்கு மேல் இருக்க வேண்டும் என்பது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலாகும்.
"1980களில் தாதிகள் அணிந்த பாவாடையுடன் ஒப்பிடும்போது பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஷரியாவுக்கு ஏற்ப முழுக்கால் சட்டையாக மாற்றப்பட்டது," என்று அவர் விளக்கினார்.
திரு வான் ரஸாலிக்கு அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ள மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் முருகா ராஜதுரை, "நமது சுகா தார அமைப்பின் எதிர்காலம் மற்றும் நிலைத்தன்மை குறித்து நாடு தழுவிய நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் தாதிகளின் சீருடை பற்றி எம்.பி பேசுகிறார்," என்றார்.

