ஜார்ஜ்டவுன்: பெரிக்கத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணிக்கு மலேசியாவில் 80 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களின் ஆதரவு உண்டு என்று அக்கூட்டணியின் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மலாய் வாக்காளர்களில் பெரும்பாலோர் தற்போதைய பக்கத்தான் ஹரப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டணியின் ஒற்றுமை அரசாங்கத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டுள்ளனர் என்றும் திரு முகைதீன் கூறினார்.
"ஒற்றுமை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்ட அவர்கள் தங்கள் ஆதரவை 'பிஎன்' கூட்டணிப் பக்கம் திருப்பியுள்ளனர். நாட்டின் தற்போதைய பொருளியல் நிலையால் மக்கள் வறுமையால் அவதிப்படுகின்றனர்," என்று அவர் பினாங்கின் ஜார்ஜ்டவுன் நகரில் 'பிஎன்' கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
"குறைந்த வருமானம் ஈட்டும் மக்களில் 40% மலாய்க்காரர்கள். நடுத்தர வருமானம் ஈட்டும் மக்களில் 40 விழுக்காட்டில் மலாய்க்காரர்களும் மலாய்க்காரர் அல்லாதவர்களும் உள்ளனர். அவர்கள் பல்வேறு நிதிச் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கு உதவ அரசாங்கம் என்ன செய்துள்ளது? ஒன்றுமில்லை," என்றும் திரு முகைதீன் விவரித்தார்.
"வரும் மாநிலத் தேர்தல்களில் சிலாங்கூரிலும் 80% வாக்காளர்களின் ஆதரவு 'பிஎன்' கூட்டணிக்குக் கிடைக்கக்கூடும். 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு 'பிஎன்' கூட்டணிக்கு அடித்தள ஆதரவு அதிகரித்திருப்பதை தம்மால் உணர முடிகிறது. ஒற்றுமை அரசாங்கம் ஆட்சி அமைத்து ஆறு, ஏழு மாதங்கள் ஆகியும் மக்களுக்கு உதவும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை," என்றும் அவர் கூறினார்.
"தற்போது தன் கைவசம் உள்ள கெடா, திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களையும் சேர்த்து, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகியவற்றையும் கைப்பற்ற 'பிஎன்' கூட்டணி முனைப்புடன் உள்ளது. இப்போதைக்கு பினாங்கு மாநிலத்தில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க நோக்கம் கொண்டுள்ளோம். ஆனால், அது அவ்வளவு எளிதானதன்று," என்றும் திரு முகைதீன் தெரிவித்தார்.
கெடா, திரெங்கானு, கிளந்தான், பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகள் இம்மாத இறுதியில் கலைக்கப்பட்டவுடன் ஆகஸ்ட் மாதத்தில் அவற்றின் தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கைரியுடன் முகைதீன் சந்திப்பு
இதற்கிடையே, முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலு தீனை, திரு முகைதீன் அடுத்த வாரம் சந்திப்பார். அப்போது தமது பெர்சத்து கட்சியில் சேரும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
"எங்கள் கட்சியிலும் 'பிஎன்' கூட்டணியிலும் சேர்ந்துகொள்ள அவருக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்றுக்கொள்வதை அவரது விருப்பத்துக்கு விட்டுவிட்டோம்," என்றார் திரு முகைதீன்.
திரு கைரி, பெர்சத்து கட்சியில் சேர்ந்தால், அவருக்கு அக்கட்சியின் உச்ச மன்றத்தில் இடம் அளிக்கப்படும் என்றும் அது கட்சியைப் பலப்படுத்தும் என்றும் திரு முகைதீன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

