சனா (யேமன்): ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக பயணிகள் விமானம் ஒன்று யேமன் தலைநகர் சனாவிலிருந்து சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
அந்த யேமனியா ஏர்வேஸ் விமானத்தில் இருந்தவர்கள் ஹஜ்ஜுப் புனிதப் பயணம் சென்றவர்கள் ஆவர்.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு புறப்பட்ட விமானத்தில் 277 பயணிகள் இருந்தனர்.
சனா நகரம் கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்து வந்துள்ளது.
சவூதி அரேபியாவின் தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கும் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்று வருகிறது.
அதனால் 2016ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் தலைமையிலான படைகள் சனா அனைத்துலக விமான நிலையத்தை முற்றுகையிட நேரிட்டது.
இப்போது அங்கிருந்து பயணிகள் விமானம் மீண்டும் இயங்கியிருப்பது பதற்ற நிலை தணிந்து வருவதற்கான அறிகுறிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.