கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு பெண் காவல்துறை அதிகாரி தனது சக அதிகாரிகளை இழிவுபடுத்தியதும் பொதுமக்களைப் பார்த்துக் கத்தியதும் காணொளிகளில் பதிவாயின.
அந்தக் காணொளிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (சனிக்கிழமை பின்னிரவு) 1.20 மணியளவில் கொம்பாக் வட்டார காவல்துறைத் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த 35 வயது காவல்துறை அதிகாரியைக் கைதுசெய்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் ஹுசெய்ன் உமர் கான் அத்தகவலைத் தெரியப்படுத்தியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
முழு விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்படலாம் என்றும் அவர்மீது மேலும் பல புகார்கள் காவல்துறையிடம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்க ஊழியர்கள் தங்களின் பணியைச் செய்யவிடாமல் இடையூறாக இருந்தது, தகாத வார்த்தைகளால் அவர்களை இழிவுபடுத்தியது போன்ற செயல்களைக் கைதான காவல்துறை அதிகாரி புரிந்ததாக நம்பப்படுகிறது.