பேங்காக்: மியன்மார் ராணுவ அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சரை அரசியல் நெருக்கடி குறித்து பேச அதிகாரபூர்வமற்ற கூட்டத்திற்கு தாய்லாந்து அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், ஆசியானின் முக்கிய நாடுகள் அதில் பங்கேற்பதில் இருந்து விலகி இருக்க முடிவுசெய்துள்ளன. இந்த விவகாரம் இப்போது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக உறுதி அளித்திருக்கும் ஒரே ஆசியான் நாடு கம்போடியா.
முன்னதாக, மியன்மாரில் ராணுவத்தால் கவிழ்க்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அமைதிப் பேச்சு தொடங்குவதற்கான உடன்பாட்டை ராணுவ அரசாங்கம் மதிக்கத் தவறியது. அதன் காரணமாக, ஆசியான் நடத்தும் உயர்நிலைக் கூட்டங்களில் மியன்மார் ராணுவ ஜெனரல்கள் யாரும் பங்கேற்க ஆசியான் கூட்டமைப்பு ஈராண்டு தடை விதித்தது.
ஆயினும், தாய்லாந்தில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்து பிரதமர் பொறுப்பில் அமர்ந்திருக்கும் பிரயுத் சான் ஓச்சா, ஆசியானின் இதர வெளியுறவு அமைச்சர்களுடன் கலந்துகொள்ளுமாறு மியன்மார் ராணுவ அரசாங்க வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அந்தக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பு, அண்மையில் தாய்லாந்து தேர்தலில் வென்ற காபந்து அரசாங்கத்திடம் வந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் மியன்மார் அரசாங்கப் பேச்சாளரிடம் இருந்து பதில் எதனையும் ஊடகங்களால் பெற இயலவில்லை.

