காட்மாண்டு: கிழக்கு நேப்பாளத்தில் பொழியும் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் திடீர் வெள்ளத்திலும் குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டார், 25 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவர் மாண்டுவிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்ற வாரத்திலிருந்து கனமழை பொழிந்து வருகிறது.
இதுவரை வெளிவந்துள்ள தகவல்களின்படி முதன்முறையாக ஒருவர் பலியாகியிருக்கிறார்.
ஆண்டுதோறும் இந்தக் காலகட்டத்தில் நேப்பாளத்தில் தொடர்ந்து மழை பொழியும்.
கிழக்கு நேப்பாளத்தில் உள்ள சங்குவாசாபா வட்டாரத்தில் ஹேவா ஆற்றில் அமையவிருக்கும் நீர்மின் திட்டத்துக்கான (ஹைட்ரோஇலெக்ட்ரிக்) கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மழையில் அந்தக் கட்டுமானத் தளம் அழிந்துபோனதோடு அங்கு வேலை செய்துகொண்டிருந்த 16 ஊழியர்கள் காணாமற்போயினர்.
இந்தியாவுடனான எல்லைக்கு அருகே இருக்கும் தாப்லெஜுங், பாஞ்தார் வட்டாரங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் ஒன்பது பேர் காணாமற்போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழையால் மலைப்பகுதியில் அமைந்துள்ள சிதிங்வா கிராமத்தில் இருக்கும் குறைந்தது 20 வீடுகள் அழிந்துபோகும் அபாயம் நிலவுகிறது.
எனினும், மழையால் மீட்புப் பணியாளர்கள் அப்பகுதியைச் சென்றடைவது சவாலாய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.