சோல்: தென்கொரியாவில் மேற்படிப்புக்கு செல்லாமலும் வேலை தேடாமலும் இருக்கும் இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை வெளியான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
உலகிலேயே பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று. இதைச் சரிசெய்ய அந்நாடு போராடி வரும் சூழலில் இளையர்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பது அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு பின்னடைவாக உள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு 20 வயதுகளில் வேலைக்கு செல்லும் இளையர்களின் எண்ணிக்கை 63,000 வரை குறைந்து 3.83 மில்லியனாகி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
மேலும், ஒட்டுமொத்தத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை முந்திய ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு 67,000 வரை குறைந்து 241,000 ஆக உள்ளது என்று அத்தரவுகள் குறிப்பிடுகின்றன.
கடந்த மே மாதம், வேலையில்லாத 357,000 இளையர்களிடம் பொருளியல் நடவடிக்கையில் அவர்களுடைய பங்கு என்ன என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள், “நாங்கள் வேலை தேடுவதிலிருந்தும் வேலைக்குச் செல்ல ஆயத்தமாவதிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுத்து வருகிறோம்,” என்று கூறினர்.
அதற்கு முக்கியக் காரணமாக அவர்கள் கூறுவது, வேலைச் சூழலும் ஊதியமும் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்பதுதான். தென்கொரியாவில் குறைந்து வரும் மக்கள்தொகையும் இதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

