கோலாலம்பூர்: மலேசியாவில் ஐனா சப்ரினா என்றுப் பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு வானொலிப் படைப்பாளர் தன் முதல் நிகழ்ச்சியை திங்கட்கிழமை படைத்தது. அது ஆங்கில மொழி வானொலி நிலையமான ‘ஃபிளை எஃப்எம்958’இல் இரண்டு மணி நேர இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது.
மலேசியாவின் ஆகப் பெரிய பொழுதுபோக்கு, ஊடக நிறுவனமான ‘மீடியா பிரிமா’ இந்தப் புதிய முயற்சியைச் செய்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் இருவேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“மலேசியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு வானொலிப் படைப்பாளராக இதுதான் என் முதல் நாள். என்னை ‘ஃபிளை எப்எம்958 ‘ தனது குழுவில் இணைத்ததற்கு நன்றி,” என்று ஐனா கடந்த வியாழக்கிழமை தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து மற்றொரு பதிவில், “என்னுடைய முதல் நாள் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது! இன்று என் நிகழ்ச்சியைக் கேட்க யார் யாருக்கு வாய்ப்பு கிடைத்தது?” என்று அது பதிவிட்டிருந்தது.
‘ஃபிளை எஃப்எம்’ தயாரிப்புப் பொறியாளர்கள் ஐனாவை வடிவமைத்துள்ளனர். பல்வேறு இசைத்தட்டுகளின் தரவுகளை அதில் பதிவேற்றியுள்ளனர். ஐனாவால் புதிய இசைகளை உருவாக்கவும், வெவ்வேறு இசைகளைச் சேர்க்கவும், விருப்பத்திற்கேற்ப இசையை வழங்கவும் முடியும்.
பலர் இந்த செயற்கை நுண்ணறிவு வானொலிப் படைப்பாளர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்றும் மனிதர்கள் தொகுத்து வழங்குவதுபோல் இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர். வேறு சிலர் இது மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துவிடும் என்று வருத்தத்தோடு தெரிவித்திருந்தனர்.