ஆக்லாந்து: திறன்மிக்க வெளிநாட்டு ஊழியர்களை அதிக அளவில் வேலைக்கு எடுக்க நியூசிலாந்து முடிவுசெய்துள்ளது.
அவர்கள் விரைவில் நிரந்தரக் குடியுரிமை பெறவும் வழிவகுக்கப்பட்டுள்ளது என்று அந்நாடு புதன்கிழமை அறிவித்தது.
பொருளியலில் முன்னேறிய பல நாடுகள் கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளன. இதன்மூலம் ஊழியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று அந்நாடுகள் கருதுகின்றன.
இதுகுறித்து நியூசிலாந்து குடிநுழைவுத்துறை அமைச்சர் மைக்கல் உட்ஸ் கூறும்போது, ”ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதை நான் அறிவேன்,” என்றார்.
மேலும், அதிக திறனுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நியூசிலாந்தில் நிரந்தரக் குடியுரிமை வழங்குவது அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அந்நாட்டுத் தொழிலதிபர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார்.


