புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து மருந்துப் பொருள்களும் ஜூலை 1 ஆம் தே[Ϟ]தி முதல் தரப்பரிசோதனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிறகே இறக்குமதி செய்யப்படும் என்று ஆப்பிரிக்க நாடான காம்பியா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் அந்நாட்டில் 70 சிறார்கள் இறந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதிற்குட்பட்டவர்கள். அதைத் தொடர்ந்து இந்திய மருந்துகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட முதல் கட்டுப்பாடாக இது பார்க்கப்படுகிறது.
அம்மருந்தில் எத்திலீன் கிளைக்கால், டைஎத்திலீன் கிளைக்கால் போன்ற வேதிப்பொருள்கள் அளவுக்கு மீறி அதிகமாக கலக்கப்பட்ட காரணத்தால் சிறார்களுக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மாண்டார்கள் என்று உலகச் சுகாதார நிறுவனம் இந்தியாவிடம் தெரிவித்தது.
ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் பாதிக்கும் மேற்பட்ட மருந்துகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 71 மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு இந்திய சுகாதார அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது. அவற்றில் 18 நிறுவனங்களை மூடவும் அது உத்தரவிட்டுள்ளது.
மருந்துகளின் தரத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் தரமான மருந்துகளின் தயாரிப்பை உறுதிசெய்வதற்காக பகுப்பாய்வு செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளோம் என்றும் இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 3,000 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.