கோலாலம்பூர்: ஃபேஸ்புக்கை நிர்வகிக்கும் ‘மெட்டா’ நிறுவனத்தின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இனம், சமயம், இணையச் சூதாட்டம், மோசடி விளம்பரங்கள் போன்ற தகாத பதிவுகள் ஃபேஸ்புக்கில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. அதனால், அவற்றை அகற்றும்படி பலமுறை மெட்டாவிடம் கேட்டுக்கொண்டபோதும் அவை அகற்றப்படவில்லை. மேலும், அந்நிறுவனம் அளித்த பதில் எங்களுக்கு மனநிறைவளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் இருக்கும் அவசரத்தை அது புரிந்துகொள்ளவில்லை. இதனால், அதிகமானோர் அப்பதிவுகளைப் பார்த்து கவலையடைந்தனர்,” என்று மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) தெரிவித்தது.
மேலும், “இந்த விவகாரத்தில் மெட்டா எங்களுக்குப் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதனால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து வேறுவழி இல்லை. மக்கள் மின்னிலக்க உலகை பாதுகாப்பாக இயக்குவதை உறுதிப்படுத்தவே நாங்கள் இந்த நடவடிக்கையை மெட்டாவுக்கு எதிராக மேற்கொள்கிறோம்,” என்றும் ஆணையம் கூறியது.
“மெட்டாவின்மீது நாங்கள் எடுக்கும் நடவடிக்கை மோசடிச் செயல்களுக்கு எதிராகப் பயனீட்டாளர் பாதுகாப்பை மேம்படுத்தவும் இணையப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும்தான்,” என்றும் அது குறிப்பிட்டது.