சிங்கப்பூர்: ஆசியாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பநிலை புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி சாதனங்களின் தேவையை அதிகப்படுத்தி உள்ளன.
ஏற்கெனவே நடப்பில் உள்ள மின் விநியோகத்தை அதிகப்பபடுத்துவதோடு மின்மாற்று முறையை மேம்படுத்த வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது.
ஆசிய வட்டாரத்தில் ஏப்ரல் இறுதிவாக்கில் 40 டிகிரி செல்சியசைக் கடந்து வெப்பநிலை சென்றது. இது வழக்கத்திற்கு மாறான நிலவரம். அதன் காரணமாக அந்த வட்டாரத்தில் மின் பற்றாக்குறை அதிகம் ஏற்பட்டது.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் சூரியசக்தி உற்பத்தி செய்யும் மாநிலமான ராஜஸ்தான் தொழில்நுட்ப சவால்களை எதிர்நோக்குகிறது. அதனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேவை எழக்கூடும் என்று மத்திய மின்சார அமைச்சு தெரிவித்து உள்ளது.
அதேநேரம் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்கூடங்களின் பணிகளை இந்தியா விரிவுபடுத்தி வருகிறது. சீனாவும் அதிகரித்து வரும் மின்தேவையைச் சமாளிக்கப் போதுமான விநியோகம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய மின் விநியோக நிலையத்தை உருவாக்கி வருகிறது.