கோலாலம்பூர்: மலேசியாவில் அதிகமானோர் இதய நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
அந்நாட்டில் சராசரியாக ஒருவருக்கு 58 வயதில் மாரடைப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது. தாய்லாந்தில் 63 வயதிலும் சிங்கப்பூரில் 68 வயதிலும் சராசரியாக ஒருவர் இதய நோய்க்கு ஆளாகிறார்.
மேலும், உலகளவில் ஒருவர் இதய நோய்க்கு ஆளாவதற்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி வயதைக் காட்டிலும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே மலேசியர்கள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மலேசியர்கள் பலரிடையே அதிகமான கொழுப்புச் சத்து இருப்பது அடையாளம் காணப்படாமல் போவது இந்நிலைக்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் உடலில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருந்தது 24.6 விழுக்காட்டு மலேசியர்களுக்குத் தெரியவில்லை.
இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏலன் ஃபோங் ஆசிரியராக இருந்த மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

