ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் காற்றுத்தூய்மைக்கேடு மோசமடைவதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கக் கூறி அரசாங்கத்துக்கு நெருக்குதல் எழுந்துள்ளது.
2016ஆம் ஆண்டிலிருந்து ஜகார்த்தாவில் காற்றின் தரம் குறைந்து வந்துள்ளது. அதற்கு முன்னரும் நிலைமை மோசமடையத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
2016ஆம் ஆண்டில் அந்நகரில் வாழ்வோரில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளாயினர்.
2023ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து ஜகார்த்தாவின் காற்றுத்தூய்மைக்கேடு மோசமடைந்து வந்துள்ளது. உலகளவில் காற்றுத்தூய்மைக்கேட்டால் ஆக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நகரங்கள் பட்டியலில் ஜகார்த்தா தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளதாகக் காற்றுத்தூய்மைக்கேட்டைக் கணிக்கும் ‘ஐகியூஏர்’ நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2023ஆம் ஆண்டில் காற்றுத்தூய்மைக்கேட்டால் 5,300 பேர் மரணமடையக்கூடும் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது.
எனினும், ஜகார்த்தாவில் இப்பிரச்சினையைக் கையாளும் முயற்சிகளில் அதிகம் முன்னேற்றம் இல்லை என்று சில தரப்பினர் கூறுகின்றனர். நகரின் அரசாங்கம் நிலைமையைச் சரிசெய்ய முயற்சிகள் எடுத்துள்ளது; இருந்தாலும் தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பது சிலரின் வாதம்.

