கோலாலம்பூர்: மலேசிய அரசு வாகனத்தின் உரிமத் தகட்டில் ‘இஸ்தெரி யாப் பெர்தானா மந்திரி (பிரதமரின் மனைவி)‘ என எழுதப்பட்ட புகைப்படம் சமூக ஊடக்ங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் மனைவி திருவாட்டி வான் அஸிஸா வான் இஸ்மாயில் அண்மையில் கோத்தா கினபாலுவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அவருடைய வாகனத்தில் தான் அவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
இந்தப் புகைப்படம் அவருடைய வாகனம் நிறுத்தப்பட்டிருந்த பிரபலமான ஹோட்டலுக்கு வெளியே எடுக்கப்பட்டது.
இது குறித்து சாபாவின் மாநிலச் செயலாளர் சஃபார் உன்டாங் கூறுகையில், “பிரதமர், அவரின் மனைவி, அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அவர்களுடைய மனைவிகள் உட்பட மிகவும் முக்கியமான பிரபலங்களின் அரசு செயல்பாடுகளின்போது அரசின் விதிமுறைகளின்படி அவர்களின் வாகனத்தின் உரிமத்தகட்டில் இவ்வாறு எழுதப்படும்,” என்றார்.
மேலும், “பிரதமரின் மனைவி ‘இஸ்தெரி யாப் பெர்தானா மந்திரி’ என எழுதப்பட்ட உரிமத் தகட்டை கேட்கவில்லை. மிகவும் முக்கியமான பிரபலங்களின் வருகையின்போது மட்டும் அவர்களின் வாகனத்தின் உரிமத் தகட்டில் அவ்வாறு எழுதப்படும். அது நிரந்தரமான ஒன்றன்று, ” என்றும் அவர் கூறினார்.

