கெய்ரோ: எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரில் 14 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
மேலும் சிலரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அலெக்சாண்டிரியாவின் மத்திய குடியிருப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது. அண்மை ஆண்டுகளாக எகிப்தில் தொடர்ந்து பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அந்நாட்டில் கட்டுமானப் பணிகள் முறையாக நடைபெறாததை இது காட்டுவதாகக் கூறுப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் அங்கு தங்கிக்கொண்டிருந்தவர்கள் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அலெக்சாண்டிரியாவில் உள்ள பல கட்டடங்கள், விடுமுறைகளின்போது உள்நாட்டிலேயே பயணம் மேற்கொள்ளும் எகிப்தியர்களால் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு எகிப்தியர்கள் பலர் அந்நகரத்துக்குச் சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஆனால் சம்பவம் நிகழ்ந்தபோது அந்தக் கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.