கோலாலம்பூர்: மலேசியாவில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
தேர்தலின்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், காவல்துறையினர், ராணுவத்தினர் ஆகியோர் ஆகஸ்ட் 8ஆம் தேதி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ஜூலை 29ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். அதன்பின்னர் 14 நாள்கள் தேர்தல் பிரசாரம் நடைபெறும்.
கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர், நெகரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 245 சட்டமன்ற இடங்களுக்குத் தேர்தல் நடக்கவுள்ளது.
அம்மாநிலங்களின் சட்டமன்றங்கள் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதிக்குள் கலைக்கப்பட்டன.
இந்தத் தேர்தல், பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைச் சோதிக்கும் விதமாக அமையும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கட்சி, அதன் முன்னாள் எதிர்க்கட்சியான பாரிசான் நேஷனலுடன் முதல்முறையாகக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் 9.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருப்பதாக தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கனி சாலே கூறினார்.
வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க பதிவு செய்துகொள்ளும் வசதி ஜூன் மாதம் 15ஆம் தேதியிலிருந்து உள்ளது. இந்த வசதி வரும் சனிக்கிழமையுடன் முடிவுறுகிறது என்று அவர் தெரிவித்தார். இதில் உள்நாட்டில் இருப்போர் அஞ்சல் மூலம் வாக்களிக்க பதிவு செய்து கொள்ளும் நாள் ஜூலை 26ல் முடிவுறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தேர்தல்களில் தேசிய முன்னணிக் கூட்டணிக் கட்சிகளான மலேசிய சீனர் சங்கமும் மலேசிய இந்தியர் சங்கமும் போட்டியிடாது. இதை இந்தக் கட்சிகள் ஆழ்ந்த பரிசீலனைக்குப் பின் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது பற்றி புதன்கிழமை கூறிய மலேசிய இந்தியர் காங்கிரஸ், தனது முடிவு கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இதில் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல் முடிவுகள் தங்கள் கட்சிக்கு மிக மோசமாக அமைந்ததால் தாங்கள் அடுத்த பொதுத்தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக இவ்விரு கட்சிகளும் தெரிவித்ததாகச் செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
மலேசிய சீனர் சங்கம் தான் போட்டியிட்ட 44 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. மலேசிய இந்தியர் சங்கத்தைப் பொறுத்தவரை அது போட்டியிட்ட 10 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வென்றது என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.