லுவிவ்: உக்ரேனின் மேற்குப்பகுதியில் உள்ள லுவிவ் நகரில் உந்துகணைத் தாக்குதல் நடந்துள்ளது.
உந்துகணைகள் குடியிருப்பு புளோக் ஒன்றைத் தகர்த்தது, அதில் மூன்று பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
போர்ப் பகுதிகளுக்கு அருகில் இல்லாத லுவிவ் நகரம் இப்போது தாக்கப்பட்டது அவ்வட்டார மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளோக்கின் மேல்தளம் தீயால் கருகியது. அதில் இருந்த கிட்டத்தட்ட 60 வீடுகள் பாதிக்கப்பட்டன. 8 பேருக்கு காயம் ஏற்பட்டது.
கட்டடச் சிதைவுகளுக்கு அடியில் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. உந்துகணைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உந்துகணைத் தாக்குதல் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
உக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஓராண்டாகவே உந்துகணை, ஏவுகணை, வெடிகுண்டுகள் கொண்டு தாக்கி வருகிறது. சில நேரம் மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

