மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் பேருந்தும் காரும் மோதிக்கொண்டன.
அவ்விபத்தில் மலேசியர் ஒருவரும் இந்தோனீசியர் ஒருவரும் மாண்டனர். சிங்கப்பூரர்கள் மூவர் லேசாகக் காயமடைந்தனர்.
நெகிரி செம்பிலான் காவல்துறை அதிகாரி ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் இதனைத் தெரிவித்தார்.
‘எல்ஏ ஹாலிடேஸ் எக்ஸ்பிரஸ்’ பேருந்தில் பயணம் செய்த 42 வயது இந்தோனீசிய மாதும் அதன் ஓட்டுநரான 33 வயது மலேசியரும் மாண்டதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அப்பேருந்தில் சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், ஸ்பெயின், கனடா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் பயணம் செய்தனர்.
சிங்கப்பூரர்களான திரு கஸாலி முஸ்தஃபா, 69, அவரது மகன் சித்திக் கஸாலி, 35, திரு லோ ஜா செங், 25, மூவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
விபத்தில் சம்பந்தப்பட்ட காரை ஓட்டிய மலேசிய ஆடவருக்குக் காயம் ஏதுமில்லை. ஏழு மாதக் கர்ப்பிணியான அவரது மனைவி லேசான காயங்களுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர்களும் கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது.
பேருந்தில் பயணம் செய்த 19 பயணிகளில் ஐவர் கடுமையாகக் காயமடைந்ததாக மலேசியக் காவல்துறை தெரிவித்தது.
விபத்தையடுத்து அந்த விரைவுச்சாலையில் 14 கிலோமீட்டர் தொலைவுவரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
விசாரணை தொடர்கிறது.