ஜகார்த்தா: மியன்மார் எதிர்த்தரப்புத் தலைவர் ஆங் சான் சூச்சியைச் சந்தித்திருப்பதாகத் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டோன் பிரமுட்வீனாய் கூறியிருக்கிறார்.
மியன்மாரில் உள்ள நெருக்கடியைத் தீர்க்க அந்நாட்டு ராணுவத்துடன் பேச்சு நடத்துவதைத் திருவாட்டி சூச்சி ஆதரிப்பதாகத் திரு பிரமுட்வீனாய் தெரிவித்தார்.
ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு இடையே அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மியன்மார் விவகாரத்திற்குத் தீர்வுகாணும் வழியை இருவரும் ஆராய்வதாக அவர் சொன்னார்.
சூச்சி அம்மையார் மியன்மார் தலைநகர் நேப்பிடாவில் உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைக் காண்பதற்கு அவரது சட்டக் குழுவினர் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை.
2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து மியன்மாரில் கடும் வன்செயல்கள் இடம்பெற்று வருகின்றன.