வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத் தலைவர் இலோன் மஸ்க் புதன்கிழமை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். எக்ஸ்ஏஐ என்பது அதன் பெயர்.
அதில் ஓப்பன்ஏஐ’, கூகல், டீப்மைண்ட், டெஸ்லா, டொரோண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆய்வாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அபாயங்கள் குறித்து திரு மஸ்க் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். அது ஆகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் அதிவேகமாக இயங்குதல் என்பது துர்தேவதைகளுக்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம் என்றும் அவர் குறிப்பிட்டதுண்டு.
‘சேட்ஜிபிடி’யை உருவாக்கிய ஓப்பன்ஏஐ நிறுவனத்துக்குப் போட்டியாக திரு மஸ்க் புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
புதிய நிறுவனம் திரு மஸ்க்கின் மற்ற நிறுவனங்களில் இருந்து தனிப்பட்டமுறையில் இயங்கும் என்றும் ஆனால் அது உருவாக்கும் தொழில்நுட்பத்தை டுவிட்டர் உள்ளிட்ட மஸ்க்கின் மற்ற நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் கூறப்பட்டது.
இந்தப் பிரபஞ்சத்தின் இயல்பைப் புரிந்துகொள்வதே எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் இலக்கு என்று எக்ஸ்ஏஐ நிறுவன இணையத்தளம் குறிப்பிடுகிறது.
உண்மையைப் புரிந்துகொள்வதும் வாழ்க்கையின் ஆகப் பெரிய கேள்விகளுக்கு விடையளிப்பதும் தமது புதிய நிறுவனத்தின் இலக்குகள் என்று திரு மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

