லண்டன்: செயற்கை இனிப்பூட்டியான ‘அஸ்பார்டேம்’ புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘கார்சினோஜன்’ எனப்படும் பொருளின் கீழ் வகைப்படுத்தப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு நிபுணர் குழுக்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தன.
இருப்பினும், ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகளில் அதனை உட்கொள்வது பாதுகாப்பானது என்று அவை கூறின.
அந்தப் பொருள் தீங்கு ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிகிறது, ஒரு குழு. மற்றொரு குழு, அந்தப் பொருள் எவ்விதத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை மதிப்பிடுகிறது.
உலகின் மிகப் பிரபலமான இனிப்பூட்டிகளில் ‘அஸ்பார்டேம்’மும் ஒன்று. ‘டயட் கோகா-கோலா’ பானங்கள், ‘மார்ஸ் சூயிங்கம்’ போன்றவற்றில் அது பயன்படுத்தப்படுகிறது.
சீனியைத் தவிர்க்க செயற்கை இனிப்பூட்டிகளை உட்கொள்பவர்களுக்கு அண்மைய அறிவிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஊட்டச்சத்துத் துறைத் தலைவர் டாக்டர் பிரான்செஸ்கோ பிரான்கா செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
உணவில் சீனியைச் சேர்க்க வேண்டுமா இனிப்பூட்டியைச் சேர்க்க வேண்டுமா என்ற சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு, மூன்றாவது தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும் என்றார் அவர்.
அவர்கள் அவற்றுக்குப் பதிலாகத் தண்ணீரை அருந்தவேண்டும் என்று டாக்டர் பிரான்கா கூறினார்.
இந்நிலையில், ‘அஸ்பார்டேம்’ தீங்கு ஏற்படுத்தும் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கூட்டு உணவு, வேளாண்மை அமைப்பு மேற்கொண்ட விரிவான மறுஆய்வில் தெரியவந்தது.
இருப்பினும், ஒருநாளில் 40 மில்லிகிராமுக்கும் குறைவான அளவிலே ‘அஸ்பார்டேமை’ ஒருவர் உட்கொள்ள வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.