கியவ்: வாக்னர் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் ரஷ்யாவிலிருந்து பெலருஸ் சென்றடைந்துள்ளதாக உக்ரேனிய, போலந்து அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
உக்ரேனிய எல்லை அமைப்பைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் டெலிகிராம் செயலியில் வெளியிட்ட அறிக்கையில், “வாக்னர் பெலருசில் உள்ளது,” என்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சில வாக்னர் படைவீரர்கள் பெலருசில் இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான இருவர் ராய்ட்டர்சிடம் கூறினர்.
இந்நிலையில், தெற்கு ரஷ்ய நகரமான ரோஸ்டவ் ஆன் டானைவிட்டு ஜூன் 24ஆம் தேதி புறப்பட்ட வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி பிரிகோஸின், இதுவரை பொதுவெளியில் காணப்படவில்லை.
மிரட்டல்களைச் சமாளிக்க பெலருஸ் உடனான தனது நாட்டு எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்திக்கொள்ளப் போவதாக போலந்து முன்னதாகக் கூறியிருந்தது.
பெலருசில் வாக்னர் வீரர்கள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து ரஷ்யா அல்லது பெலருஸ் தரப்பிலிருந்து கருத்து எதுவும் வெளிவரவில்லை.

