சோல்: தென்கொரியா புதிய மசோதா ஒன்றை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது.
கைக்குழந்தைகளைக் கைவிடுவது, கொலை செய்வது போன்ற கொடுமைகள் இனிமேல் மிகக் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்.
கைக்குழந்தைகளைக் கொலை செய்யும் பெற்றோருக்கு மரண தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் வகை செய்கிறது.
தென்கொரியாவில் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் கைக்குழந்தை கொடுமைகள் தொடர்பான பிரிவுகள் முதன்முதலாக நடைமுறைக்கு வந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவற்றில் திருத்தம் இடம்பெற்று இருக்கிறது.
தென்கொரியாவில் இதுவரை கைக்குழந்தையை கைவிடுகின்ற அல்லது கைவிடுவதால் அந்தக் குழந்தைக்கு மரணம் ஏற்படுகின்ற சம்பவம் நிகழ்ந்தால் அத்தகைய குற்றங்களுக்குக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தண்டனை குறைக்கப்படுவதுண்டு.
ஆனால், இனிமேல் இத்தகைய குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
இனிமேல் கைக்குழந்தையைக் கைவிட்டால் மூன்றாண்டு வரை சிறை அல்லது ஐந்து மில்லியன் வோன் (S$5,230) அபராதம் விதிக்க முடியும்.
இந்தத் தண்டனை இரண்டாண்டு வரைப்பட்ட சிறை அல்லது 3 மில்லியன் வோனாக இதுவரை இருந்தது.
கைக்குழந்தையைக் கொலை செய்தால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கூட கிடைக்கலாம்.
இதுவரை அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத்தண்டனையாக இருந்த இந்தத் தண்டனை அகற்றப்பட்டு கடுமையான தண்டனை நடப்புக்கு வருகிறது.