கியவ்: உக்ரேனின் ஒடெசா துறைமுகத்தின் மீது இரண்டாவது இரவாக ரஷ்யா ஆகாயத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
ஆனால் முக்கிய துறைமுகத்தை அச்சுறுத்த முடியாது. தானியங்களை ஏற்றுமதி செய்யும் பணியில் அத்துறைமுகம் தொடர்ந்து ஈடுபடும் என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.
ஒடெசா வட்டார ஆளுநரான ஒலே கிபெர், ரஷ்யாவின் ஆகாயத் தாக்குதலைத் தடுப்பதற்காக ஆகாயத் தற்காப்பு முறை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.
பாதுகாப்புக் கருதி குடியிருப்பாளர்கள் முகாம்களில் தங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கிரைமியா தீபகற்பத்துடன் ரஷ்யாவை இணைக்கும் பாலம் திங்கட்கிழமை தகர்க்கப்பட்டதால் பதிலடித் தரப்படும் என்று ரஷ்யா சூளுரைத்திருந்தது. இதையடுத்து தானிய ஏற்றுமதியில் முக்கியமாக விளங்கும் உக்ரேனின் ஒடெசா துறைமுகத்தை ரஷ்யா தாக்கியிருக்கிறது.
திங்களன்று பாலம் தாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஓராண்டு பழமையான தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியது. இந்த நடவடிக்கை, உலகம் முழுவதும் பட்டினி அபாயத்தை உருவாக்கும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
“உக்ரேன், துருக்கி, ஐநா ஆகியவற்றின் தானிய ஏற்றுமதி பாதையை சீர்குலைத்து உலகை அச்சுறுத்த அவர்கள்(ரஷ்யப் படையினர்) விரும்புகின்றனர்,” என்று ஒடெசா ராணுவ நிர்வாகத்துக்கான பேச்சாளர் செர்ஹி பிராட்சுக் தெரிவித்தார்.
ஆனால் ஒடெசாவை அச்சுறுத்த முடியாது. எங்களுடைய பணி தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

