நோம்பென்: கம்போடிய பொதுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் வேளையில் ஆளும் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஹுன் மானெட் தமது இறுதி அரசியல் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தி உள்ளார்.
பேரணியில் உரையாற்றிய அவர், “கம்போடிய மக்கள் கட்சி (சிபிபி) மட்டுமே கம்போடியாவில் அமைதியையும் பாதுகாப்பையும் அளிக்கும் ஆற்றல் பெற்றுள்ளதை வரலாறு நிரூபித்து உள்ளது,” என்றார்.
இவரது தந்தையும் கம்போடியாவில் நீண்டகாலம் பிரதமர் பதவியில் இருந்தவருமான ஹுன் சென், 70, இந்தப் பேரணியில் காணப்படவில்லை.
45 வயதான ஹுன் மானெட் ஆளும் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதிலும் அரசியல் பதவி மாற்றம் எப்போது நிகழும் என்று சிபிபி தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
பொதுத் தேர்தல் நடைபெறும் வேளையில் எதிர்க்கட்சியினரையும் அதிருப்தியாளர்களையும் அதிகாரிகள் அடக்கி ஒடுக்குவதாக குறைகூறல்கள் எழுந்துள்ளன.
தேர்தலில் 18 கட்சிகள் பங்கேற்றாலும் வலுவான எதிர்க்கட்சியான கேண்டில்லைட் கட்சி தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
போட்டியிடுவதற்குத் தேவையான தகுதிகளை அக்கட்சி பெற்றிருக்கவில்லை என்று தேசிய தேர்தல் ஆணையம் இந்நடவடிக்கையை எடுத்தது.
அதனால், ஒட்டுமொத்த வெற்றியையும் சிபிபி பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
2018ஆம் ஆண்டு தேர்தலிலும் இதேபோல நடைபெற்றதன் காரணமாக எல்லா 125 தொகுதிகளிலும் ஆளும் கட்சியான சிபிபி வென்றது.
அப்போதும் சிபிபிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த கம்போடிய தேசிய மீட்புக் கட்சி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு அக்கட்சி கலைக்கப்பட்டது.
எனவே வெற்றி எளிதாக அமைந்தது. இந்தத் தேர்தலிலும் கிட்டத்தட்ட அதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.