நோம்பென்: ஞாயிற்றுக்கிழமை கம்போடியாவில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தல் ஒரு சார்பான தேர்தல் என்று பரவலாகக் கருதப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் பலம் ஒடுக்கப்பட்டதால் ஆளும் கட்சியான கம்போடிய மக்கள் கட்சியே (சிபிபி) மீண்டும் எல்லா 125 தொகுதிகளிலும் வெல்லக்கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் களத்தில் 18 கட்சிகள் மோத வேண்டிய நிலையில், செல்வாக்கு பெற்ற எதிர்க்கட்சியான கேண்டில்லைட் கட்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. அதனால், எஞ்சி இருக்கும் 17 கட்சிகளை வீழ்த்துவது சிபிபிக்கு சிரமமானதாக இருக்காது.
2018ஆம் ஆண்டும் இதேபோல பிரதான எதிர்க்கட்சியை முடக்கி எல்லாத் தொகுதிகளிலும் வென்றது சிபிபி. நீண்டகால பிரதமரான ஹுன் சென்னின் மகனான ஹுன் மானெட், 45, பிரதமர் வேட்பாளராகக் கருதப்படுகிறார். இதனை அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
அதனால், தேர்தலுக்குப் பிறகு தமது மகனிடம் பிரதமர் பதவியை ஹுன் சென், 70, ஒப்படைப்பாரா என்பதே தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.
அமெரிக்காவில் கல்வி பயின்றவரான ஹுன் மானெட், சிபிபி கட்சியின் இளையர் அணித் தலைவராக உள்ளார். கட்சியின் வருங்காலப் பிரதமர் வேட்பாளராக கடந்த 2021 முதல் அவர் கருதப்பட்டு வருகிறார்.
அப்போது முதல் பொதுமக்கள் நிகழ்ச்சிகள் பலவற்றில் ஹுன் மானெட் அதிகமாகப் பங்கேற்று வருகிறார். விழாக்களைத் தொடங்கி வைப்பது முதல் அனைத்துலகத் தலைவர்களைச் சந்திப்பது வரை மிகவும் சுறுசுறுப்புடன் அவர் செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் பதவி கைமாறுவது எப்போது என்று தெளிவாகத் தெரியாத நிலையில், எதிர்பார்க்கப்படுவதைக் காட்டிலும் முன்கூட்டியே அது நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
முன்னதாக, வியாழக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய சிபிபி பேச்சாளர் சோக் எய்சன், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிரதமர் பதவிக்கு ஹுன் மானெட் பெயர் குறிப்பிடப்படுவார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தலைநகர் நோம் பென்னில் சிபிபி நடத்திய பிரசாரப் பேரணியில் பிரதமர் ஹுன் சென் கலந்துகொள்ளவில்லை.