மாஸ்கோ: ரஷ்யாவின் அண்டைநாடும் நட்பு நாடுமான பெலருசுக்கு எதிரான தாக்குதல் ரஷ்யா மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் போலந்தை எச்சரித்துள்ளார்.
பெலருசுக்கு எதிரான தாக்குதலுக்கு மாஸ்கோ தக்க பதிலடி கொடுக்கும் என்று தமது பாதுகாப்பு மன்ற சந்திப்பின்போது திரு புட்டின் வெள்ளிக்கிழமை கூறினார்.
வாக்னர் படைவீரர்கள் பெலருசுக்குச் சென்றதைத் தொடர்ந்து, ராணுவப் பிரிவுகளைக் கிழக்கு போலந்துக்கு இடமாற்றம் செய்ய வார்சா பாதுகாப்புக் குழு புதன்கிழமை முடிவெடுத்தது.
பெலருஸ் எல்லைப் பகுதியைக் கைப்பற்றுவது குறித்து தனக்கு எண்ணம் இருப்பதாகக் கூறப்படுவதை போலந்து மறுத்துள்ளது.
போலந்தின் மேற்குப் பகுதி சோவியத் தலைவர் ஜோசஃப் ஸ்டாலினிடமிருந்து கிடைத்த அன்பளிப்பு என்பதை போலந்துக்கு ரஷ்யா நினைவூட்ட விரும்புவதாக தமது உரையில் திரு புட்டின் கூறினார்.
இந்நிலையில், போலந்து எல்லையிலிருந்து சில மைல் தூரத்தில் உள்ள ராணுவத் தளத்தில் பெலருஸ் சிறப்புப் படைகளுக்குப் பயிற்சி அளிக்க வாக்னர் படைவீரர்கள் தொடங்கிவிட்டதாக பெலருஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.
ரஷ்யா அண்மைய வாரங்களாக பெலருசில் அணுவாயுதங்களை நிறுத்திவைக்கத் தொடங்கியது. பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோவை திரு புட்டின் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவில் சந்திக்கவிருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகை கூறியது.
கிழக்கு போலந்தை தற்காப்பதில் அந்நாட்டிற்கு ஆதரவளிக்க ஜெர்மனியும் நேட்டோவும் தயாராக இருப்பதாக ஜெர்மானிய தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

