ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவின் லார்கின் மத்திய பேருந்து முனையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் லார்கின் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை காலை மூண்ட தீயில் நான்கு கடைகள் சேதமுற்றன.
அதுகுறித்துக் காலை 6.50 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் தீயணைப்பாளர்கள் 27 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் லார்கின் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.
இரண்டு புத்தகக் கடைகள் கிட்டத்தட்ட 90% சேதமடைந்ததாகக் கூறப்பட்டது. மூலிகைகளையும் அழகுசாதனப் பொருள்களையும் விற்கும் ஒரு கடை 70% சேதமடைந்ததாகவும் வாசனை திரவியங்களை விற்கும் ஒரு கடை 10% சேதமுற்றதாகவும் கூறப்பட்டது.
தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அந்தச் சந்தையில் காலை 8.25 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு தலா 5,000 ரிங்கிட் உதவித்தொகை வழங்கப்படும் என்று ஜோகூர் மாநில இளையர், விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டு வர்த்தகம், மனிதவளம் ஆகியவற்றுக்கான குழுவின் தலைவர் முகமது ஹைரி மட் ஷா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் சுமையைக் குறைக்க உதவும் நோக்கில் முதற்கட்டமாக இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் மாநில அரசாங்கம் பின்னர் அவர்களுக்கு மானியங்கள் அல்லது கடன் வாயிலாக உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
லார்கின் சட்டமன்ற உறுப்பினருமான முகமது ஹைரி, பாதிக்கப்பட்ட நான்கு கடைகளின் சேதத்தைத் தீயணைப்பு, மீட்புத் துறை மதிப்பிட்டு வருவதாகக் கூறினார்.

