சிட்னி: மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரையோரம் ஒதுங்கிய சில மணி நேரத்திற்குள் 51 திமிங்கிலங்கள் மாண்டுபோயின.
நீண்ட துடுப்புப் பகுதியைக் கொண்ட கிட்டத்தட்ட 100 திமிங்கிலங்கள் ஆல்பனி அருகேயுள்ள செய்ன்ஸ் கடற்கரையோரம் செவ்வாய்க்கிழமை ஒதுங்கியதாகக் கூறப்பட்டது.
தொண்டூழியர்களுடன் இணைந்து எஞ்சிய 46 திமிங்கிலங்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் பூங்கா, வனஉயிர்த் துறை தெரிவித்தது.
அவற்றைக் கடலில் ஆழம் அதிகமுள்ள பகுதிக்குத் தள்ளிவிட அது திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சியில் கைகொடுக்க ஏராளமானோர் முன்வந்ததாகக் குறிப்பிட்ட துறையின் பேச்சாளர், ஆயினும் போதிய தொண்டூழியர்கள் இருப்பதால் பொதுமக்கள் அந்தக் கடற்கரைப் பகுதியிலிருந்து தள்ளி இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
“ஊழியர்கள், தொண்டூழியர்களின் பாதுகாப்பிலும் திமிங்கிலங்களை உயிருடன் கடலுக்குள் அனுப்புவதிலும் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது,” என்று பூங்கா, வனஉயிர்த் துறை தெரிவித்தது.