சோல்: தென்கொரியாவின் இஞ்சியோன் அனைத்துலக விமான நிலையம், வெள்ளிக்கிழமை முதல், முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட முக அடையாளத் தகவல்களைப் பயன்படுத்தி பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான நடைமுறையை நெறிப்படுத்துவது அதன் நோக்கம்.
‘முக அடையாள விவேக அனுமதிச் சேவை’ மூலம் பயணிகள் இனி புறப்பாட்டு வாயில்களிலும் விமானத்தினுள் நுழையக் காத்திருக்கும் இடங்களிலும் கடப்பிதழையோ ‘போர்டிங் பாஸ்’ எனப்படும் விமான இருக்கைக்கான அனுமதிச் சீட்டையோ பாதுகாவல் அதிகாரிகளிடம் காட்டத் தேவையில்லை.
தென்கொரியர்கள், வெளிநாட்டினர் என இருதரப்பினருமே இந்தச் சேவையைப் பயன்படுத்த இயலும்.
கொரிய மொழியோடு ஆங்கிலம், சீனமொழி, ஜப்பானிய மொழி ஆகியவற்றிலும் இந்தச் சேவை வழங்கப்படும்.
முதற்கட்டமாக, ஜூலை 28ஆம் தேதி முதல், இஞ்சியோன் விமான நிலையத்தின் ஆறு புறப்பாட்டு வாயில்களிலும் விமானத்தினுள் நுழையக் காத்திருக்கும் 16 இடங்களிலும் முக அடையாளத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
2025ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்த விமான நிலையத்தின் அனைத்து இடங்களிலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


