ஃப்ரீபோர்ட்: வியட்னாமியப் பிரதமர் ஃபாம் மின் சின், தம்மைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்த பிரதமர் ஃபாம் ஆர்வமாக இருப்பதாகவும் திரு பைடன் சொன்னார்.
“வியட்னாமியப் பிரதமர் என்னைத் தொலைபேசிவழி அழைத்தார். செப்டம்பர் மாதம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் ‘ஜி20’ உச்சநிலை மாநாட்டில் சந்தித்துப் பேச அவர் விருப்பம் தெரிவித்தார். ரஷ்யா, சீனா ஆகியவற்றைப்போலவே அமெரிக்காவையும் வியட்னாமின் முக்கியப் பங்காளித்துவ நாடாக உயர்த்த அவர் விரும்புகிறார்,” என்று அதிபர் பைடன் கூறினார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு நன்கொடை வழங்குவோரிடம் ஆற்றிய உரையில் அவர் அந்தத் தகவல்களைக் கூறினார்.
வாஷிங்டனில் அமைந்திருக்கும் வியட்னாமியத் தூதரகம் திரு பைடனின் பேச்சு குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

