கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் புறப்பாட்டு பகுதி அருகேவுள்ள மூன்றாம் தளத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் நிகழ்ந்த தீச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் வந்ததாக சிலாங்கூர் தீ மற்றும் மீட்புத்துறை தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 13 அதிகாரிகளும், இரண்டு தீயணைப்பு வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டதாக மீட்புத்துறை கூறியது.
குப்பைத்தொட்டியில் உள்ள குப்பையில் தீ ஏற்பட்டதாகவும் அது அந்தக் கட்டடத்தை புகையால் மூடியதாகவும் அதிகாரிகள் கூறினர்.
தீ காலை 9.10 மணியளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அது 10.30 மணி அளவில் முற்றிலும் அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீச்சம்பவத்தால் விமான நிலையக் கட்டடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

