கோலாலம்பூர்: சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் தொடர்பில் புதிய பரிந்துரையை மலேசியா சமர்ப்பிக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.
இதன் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் முடிவைத் தொடர்ந்து புதிய பரிந்துரை வடிவமைக்கப்படும் என்றும் அவர் வெள்ளிக்கிழமை கூறினார்.
பின்னர் அந்தப் பரிந்துரையை சிங்கப்பூரின் பரிசீலனைக்காக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சமர்ப்பிப்பார் என்று திரு அன்வார் தெரிவித்தார்.
மலேசிய வர்த்தகமய வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
“அதிவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் மலேசிய அளவில் இன்னும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தொடக்க முடிவை அரசாங்கம் எடுத்ததும் அது தொடர்பான புதிய பரிந்துரையை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சிங்கப்பூரின் கவனத்துக்குக் கொண்டு செல்வார்,” என்று திரு அன்வார் தெரிவித்தார்.
முன்னதாக, சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கான புதிய பரிந்துரை எதுவும் மலேசியாவிடமிருந்து பெறப்படவில்லை என்று சிங்கப்பூரின் தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்து இருந்தார்.

